Wednesday, 4 August 2010

ஆறியிரு அம்மா!

தாய்திருப் பார்வதி அன்னை - எம்
தலைவனை ஈன்றிட்ட தவமிழைத்தொருவள்
ஊட்டினள் ஒருதுளித் தாய்ப்பால் - ஈழ
நாட்டினர் நெஞ்சங்கள் நேர்கொண்டு எழவே
எப்பெருந் தேசமுங் கண்டோம் - எம
தப்பன் வழிவந்த வீரங் கொண்டடித்தோம்
துரத்தித் துரத்தி யடித்தோம் - அவர்
தாண்டிய வேகத்தில் துரத்தேலா திருந்தோம்!

இனியென்(ன) ஈழம் என்றிருக்க - பார்ப்
பணியர் பயந்திட்ட துரோகம் கண்டழுதோம்
புரியும் துரோகம் அவர்தாம் - ஆழும்
புரியும் ஒருநாள் புரிந்திட்டு வருந்தும்
துளியாய் சேர்த்திட்ட மணிகள் - அதில்
பலியாய்ப் போனது பல்லாயிரக் கணக்கு
'புரியாய் துரோகம் இதற்கே - எம
துரிமைக்கே அன்றி உன் ஒருமைக்(கு)கேடில்லை '!

மொழியும் வளமும் விழுமியமும் - பிறழ்ன்
றழியும் மாற்றான் கை மடிப்பிச்சை கொண்டால்
முடியும் வரையினில் முயன்றோம் - பெரும்
இடியே விழுந்தும் இறுதியும் கண்டோம்
தீவிரவாதிக ளென்று உல கெங்கும் - இரந்து
கூவித்திரிய, சாற்றிய போர்ப்பறை ஒய்த்து
சாத்வீகமாக சமரசம் போனோம் - நாம்
சமாதானக்குழியில் சாகத்தான் போனோம்!

சித்திரவதை பல செய்தார் - உல
கத்தினர் கத்தல்கள் உதாசித் திளித்தார்
பெற்றிட்ட பேரடி எல்லாம் - அவர்
சற்றும் மறக்காமல் திருப்பியே தந்தார்
தனிமனித சத்தியம் மீறி - இது
இனத்தின் அரசியல் நகர்வென்று கூறி
'இரப்பினும் இவர்தரார் உரிமை' - எமை
'இறங்கிப்போ' வென்றோர் வெட்கிக்க இறந்தோம்!

இதுவுமோர் போர்வடி வம்தான் - விதைத்
ததுவும் வீணென்றே ஆகாமல் போக
வதைமுகா மேகிய தூயர் - தாம்
சிதைபட்டு வதைபட்டு நோற்குமோர் வேள்வி
நிலம் பிளந்தெழும்புமோர் புரவி - அதில்
வலம்வந்து எம்மண் உலவுவாய் அம்மா
குலங் குடி கோல் கொற்றம் - செழித்தே
தமிழீழம் விளங்கும் தாயுந்தன் தருவில்!
17.06.2010

No comments:

Post a Comment