Saturday, 21 August 2010

ஊருக்குள்ள போகமுன்னம் உள்ளுக்குள்ள வந்தவளே

எல்லைப் பதவியாக் காட்டில் - எம்
எல்லாளப் படைகளின் எல்லைக்கோட்டில்,
உள்ளே ஊடுருவி ஒருமாசம் - பகை
கொல்லும் பணிபல செய்துவந்தார்.
காலை மாலையென் றின்றி - கடும்
மழையும் முதலையும் தாண்டிவந்து,
சின்னப் பொடியளுஞ் சேர்ந்து - பெண்
என்னை மறித்து வெருட்டிக் கேட்டார்.

மழைவிட்ட மாலை மயக்கத்திலே - இந்தக்
காளைகள் கூட்டத்தில் மாட்டினனோ!
மந்த ஒளியிலும் மயான அமைதியிலும் - இங்கு
எந்தப் பக்கமும் எதிரி வந்தடிப்பான்;
இந்தக் காட்டினில் வந்ததுமேன்?' - என்றே
மல்லுக்கு வந்தார் மாமனிதர்.
காலையில் காட்டுக்குள் மேயவந்த - என்
குலத்துக் கோமகளைக் கூட்டவந்தேன்.

காலை கறந்த நற் பால் குடித்து - பின்
கன்றும் குடிக்கவென் றவிழ்த்துவிட்டு,
காட்டுக்குப் போன என் மாடுகளை - நான்
இருட்டமுன் வந்து அழைப்பதுண்டு.
கன்றுகள் தாயைக் காணுதலை - வேண்டிக்
குன்றுக்கும் குழிக்கும் குதித்திருக்கும்;
கள்ளுக்குப் போன கிழவனுந் - தான்
கோள் சொல்லியே என்னையும் கொன்றுவிடும்.

மல்லுக்கு நிற்கும் வீரர்களே - என்
சொல்லினை மிகுந்து மதிப்பீரோ?
'நாமும் உன்குலக் காளைகள் தான் - வழி
போகும் திசை பற்றித் தெளிவுறவே
தேங்கிக் கிடக்கையில் நீயும் வந்தாய், - எம்
தேசப் புயல்களின் பாசறையின் - இடம்
ஏகும் திசையையும் காட்டியெங்கள் - கொடுந்
தாகம் தணிக்கவும் நீர் இறைக்க'; என

காட்டு மழையினில் நான் நனைந்து - நார்க்
கொடியாய் இளகிப் போய் நடந்து வந்தன்.
காட்டில் எத்தனை குளங்களுண்டு, - போக
கொடிகளில் நீர்க்கொடி நிறைய உண்டு?
மாடு நடந்த வாய்க் கால்களுண்டு - இவை
காடு செய்பவர்க் கறியாதவையோ?
ஒதியமலை மட்டும் போயிருந்தன் - அங்கை
எதிரி இருக்கேல்லை விரைந்து போங்கள்!

'எதிரிக் கழுத்துகள் நானறுத்து - வெறி
ஏந்திக் குடித்தனான் குருதிக் குளம்.
ஆயிரம் ஆயிரம் படைவரினும் - நாம்
தாயிடம் கொண்ட நீர் வற்றவில்லை.
முதலைக் குளங்களில் நாட்கணக்கா - பால்
மருதமரத் தின்வேர்க் குடையின் கீழே,
பரிதி வானத்தில் பார்த்திடாமல் - தனி
இரவுப் புழுக்களாய் இருந்ததுண்டு,'

'மரத்தின் இலைகளில் படுத்ததுண்டு - குளிர்
மரமாய் விறைப்புடன் இருந்ததுண்டு;
சுண்ணக் கட்டியைச் செருகிவைத்து - சுடும்
குழலை நெஞ்சோடு சாத்தி நிற்போம்;
ஓடும் ஓணாண் அறுத்துண்ட துண்டு - என்றும்
நாட்டை நம்பியே நாமிருந்தோம்.
கோட்டை சிதைத்து நாம் வருகையிலே - எமைக்
கோதை நீ வந்து சிதைத்துவிட்டாய்.'

மலையில் மிருகங்கள் மிகுந்திருக்கும் - கொடும்
மாலையில் வந்திங்கு பசியடங்கும்,
களிறும் பிடியும் காட்டிடையே - இனிக்
களிக்கவெனத் தாம் புறப்படுமுன்,
குளித்துக் காயவைத் துறங்கி - கூழ்
குடித்துக் கிடந்திட்டுப் போகலாமே?
இருக்குங் கிழவனும் செருமிடுந்தான் - ஆனா
உருக்கம் இருக்கு உங்களில;

'நாற்பது மாட்டுத் தொழுவத்தில - இங்கை
நாங்களும் கிடந்து நிம்மதியாய்,
போர்க்கதை விடுத்துப் பொடியளெல்லாம் - புதுப்
பெண்கதை என்னண்ணை? என்றரிக்க;
சிடுத்துச் செருகிய கன்னவிழி - தனைத்
திறந்தே சிரித்திட்ட பெடியளுடன்,
கழற்றிப் பூட்டிய குழல்களுடன் - சன்னங்களும்
சுழன்று கிடந்தன சிரித்தபடி'

'அண்ணை இண்டைக்கு குடங்குடமாய் - பால்
மொண்டு விழுங்கிறார் பாருங்கோடா,
மொய்த்துப் போனதன் மூளைக்குள்ள - அவா
மொய்த்துக் கிடக்கிறா போலிருக்கு!
கடிச்ச நுளம்பையும் அடிச்சிடாமல் - தான்
பிடிச்சு விடுதலை செய்யிறார் பார்!
பிடிச்ச பெண்ணை விட்டிடாமல் - மணம்
முடிச்சுப் போடோணும் என்கிறார் காண்!'

No comments:

Post a Comment