'மூன்று பக்கம் பகைவர்
சாகசங்கள் நடக்கும்
களம் எம்கைக்கு மாறும் '
மூச்சிரைக்கும் உனது
கரகரத்த குரலில்
கேட்டிருந்த கடைசி
கட்டளையை கேட்டேன்
கனவுகளில் அழுதேன்
அப்பனே ராசா
ஆருமற்றோ போனேன்
பெற்றவனே எங்கே
பிள்ளைகள் நாமிங்கே
துள்ளி நின்ற வீரம்
துரோகம் தின்ற தேசம்
தாகந்தீரா கடலில்
தவித்த தனிப்பிணமாய்
தனயன் இங்கே கிடக்க
தந்தை எங்கே தலைவா?
பக்கத்தில பிரண்டு
செத்துக்கிடக்கும் பிணமும்
எட்டத்தில மிரண்டு
ஓடிக்கொள்ளும் உயிரும்
கேட்டு நின்ற உரிமை
நட்டநடுத் தெருவில்
நாதியற்றுக் கிடக்கிறோம்
அநாதைகளின் தாயே ;
தப்பிக்கொண்ட சன்னங்களில்
தாண்டியோடும் தலைகள்
கடைசித் தோணியில்
கைநீட்டிக் கைப்பிடித்து
காலூன்றிக் கதறி
பட்டகுண்டு பறிக்க
கொடுத்த உயிர் தவிக்க
விழுந்துகிடக்கும் உடலின்
பிறப்புரிமை நினைத்து
பிதற்றிக் கொள்ளும் பிசாசுகளாய்
பாரும் ஐயா தலைவா
ஆருமற்றுப் போனோம்;
ஊனமுற்ற இனத்தின்
அறுந்து போன கயிறே
முண்டமான ஆடவரும்
கிழிந்து கிடக்கும் கன்னியரும்
சுமந்து நின்ற உயிரே
எந்தையே வாரும்
எம்முடன் வாழும்;
பாழாப்போன பாவிகள் நாம்
வாழவொரு ஈழம்
வாங்கித் தரும் தாகம்
ஊற்றாய் நின்ற அன்னை
கடலாய் நின்று தேங்கி
நிலத்தை நோக்கி ஏங்கி
நின் வருகைக்கும் நடைக்கும்
நயமான புன்-நகைக்கும்
தவமாய் கிடக்கும் தனயர்
வரமாய் வாரும் ஐயா;
உன் கால்பட்ட மண்ணும்
உன்னித் துடித்து
உயிர்பெற்று நிற்கும்,
தேகத்தில் எல்லாம்
என் தேச மண்ணை
அள்ளித் தெளித்து
ஆனந்தம் ஆடி
உன்கால்கள் விதைத்த
உன்னதங்கள் சூடி
உன் கனவு நட்டு
உதிரக் கால்வாய் வெட்டி
ஈழமாய் எழுவோம்
வானமாய் வாழ்த்தும்
தெய்வமேயான
தூயவா ஐயா.
17.05.2010
No comments:
Post a Comment