Monday, 2 August 2010

கண்ணீர்க் குளக்கட்டு!

இன்றைய நாய்க் குரைப்பு யாருக்கானது என்ற 'திக்' கிழவனுக்கு, கேட்டிருந்தது அவருக்கு. செவிடான அவளுக்கு மனம் மட்டும் தான் பதைத்துக் கொண்டது, அவளுக்குக் கடைசியில் கேட்ட மைன்ஸ் சத்தம் மட்டும் இன்னும் 'உம்' மென்றபடி..
மனத்தின் மொழி அவளுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் பேசிக் கொள்கிறாள்.
அருகில் கிடக்கும் இவனுக்கு அரைத்துக் கொடுத்த கிணத்தடிக் கங்குல் கீரையும் பிரட்டிக் குடுத்த பிஞ்சு வெண்டிப் பால்கறியும் அவனது விதைப்பையில் வந்து சேர்ந்திருந்ததா என்று தடவிக் கொண்டு கிடந்தாள். இன்னும் நிறைய தோட்டத்துக் கீரைக்கு வவுனியாவிலிருந்து விதைக்குச் சொல்லிவிட்டிருந்தது ஒரு அழுத்தத்தைத் தந்தது.
தினமும் சிலமணிநேரம் திறந்துவிடப்படும் வன்னித் தெருச்சந்தையில் விற்கப்படும் சிங்களவூர்க் காய்கறியில் தோய்ந்திருக்கும் கிருமிநாசினியை கழுவிக்கழுவி கை கறுத்துப் போனாலும், `கிழவனுக்கும் எனக்கும் தான் சிங்களக் காய்கறி; பெடியனுக்கு மருந்தடிக்காத கத்தரிக்காயும் கிணத்தடிக் கீரையளுந்தான்` என்று சந்தையில் கருத்துப் பரப்புரையும் செய்வாள். காய்கறிகளோட சேர்த்துத் தின்னும் கிருமிநாசினி தன் மகனைக் குறிவைத்த சதி என்பதை நன்கு அறிந்திருந்தாள்.
யாழ்ப்பாணத்தில் அழிந்து போய்விட்ட தம்பளப்பூச்சி, மின்மினிப் பூச்சி இனங்களை அவர் அடிக்கடி சொல்லுவதை நினைத்துப் பார்ப்பாள். `கிருமி திண்ட மிச்சத்தை தின்னலாம், கிருமிநாசினியை தின்னக்கூடாது`.
வீரனாக மடிந்தவனின் வேதவாக்கை அவனின் விதையில் இருந்து உருவான வருங்கால் விருட்சத்துக்கு உரமாகப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள், எப்போதோ வீரமரணமடைந்து விட்ட மனதுடனும், அடுத்த சந்ததியை சரியாகத் தயார்ப்படுத்த வேண்டிய தவணையிலும்.
`இன்னும் கொஞ்ச நாள்ள அவன் வளர்ந்திடுவான்`. அவனுக்கு மரபுத் தமிழ்க்கவிதை எழுதச்சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருந்தாள்.

''
வன்னி விழாங்குளம் வந்தோம் - வீழ்ந்ததை
எண்ணிச் சிலகாலம் ஏங்கிக் கிடந்தோம்
ஏங்கி இனிப் பயனில்லை - என்றே
வீங்கிய கண்களில் வெறியை வளர்ப்போம்
தாங்கும் கரங்களைச் செய்வோம்- தமிழ்
ஓங்கிடத் தழைக்கவே மரபில் சிறப்போம்
''
இன்று அவனை எழுதவைத்து அவனையே பாராயணம் பண்ணவைத்த வரிகள்,

பாசத்துக்கு வேலிபோட்டு, போர் வெறிக்குள் அவனைத் திறந்துவிட்டிருந்தாள். கையில் அவன் கிடுக்கிப் பிடித்திருந்த கெற்றப்போல் கவண் இவளுக்கு சற்று நம்பிக்கையைத் தர சரிந்து படுத்தாள்.

`இவன் அந்தத் தெருநாய்களத் துரத்துவான், தெருக்களில் எங்களின் கீதங்களைப் புரழ விடுவான். புலியின் முகத்தைக் கொண்டும் பூனையின் பண்பைக் கொண்டும் என்குலப் பெண்களுக்கும் எனக்கும் தேசத்துக்கும் காவலனாய் இருப்பான்`.

அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் முதல் குரல் ஒரு பெண்குரல் தான், எப்போதும், எல்லா நாடுகளிலுமே.

`வெறி வெறி வெறி! விரட்டு! அவனை விரட்டு!`
மனங்குமுறக் கதறினாள் மனதுக்குள்

கிட்ட வந்துவிட்ட குரைப்பொலி கிழவனை கிலிப்படுத்த குடிசை கிசுகிசுத்தது
தூண்டியெழுந்தது அரிக்கன் லாம்பின் திரியோடு அவளது திடுதிடுப்பும் சேர்ந்து.

தன்மானத்தின் எச்சங்கள்
தீர்ந்து போகாமல்
ஆங்காங்கே
கிடந்து கொல்லுகின்றன.

அழிந்துகொள்ளும் மொழிகளில்
ஒன்றைப் பேசுவதில்
எவ்வளவு மனக்கனப்பு!
அவமானச் சிறுமை!

`எங்கோ சீமையில்
ஆடவர் குழாம் ஒன்று
என்மொழி வளர்த்துச்
செழித்துக் கிடக்குதாம்`

`அங்கே இருந்து
பெறுகேனா
ஒரு விந்து?`

ஒவ்வொரு இனப்பெண்ணும் இப்பிடித்தான்.

ஆண் அல்ல, பெண்ணே இனத்தைக் காப்பவள்.

`விடியாத இனங்களின் வரிசையின்
வால்ப்பகுதியில் இணைக்கப்படிருந்த
எனது தமிழ்ச் சாதியின் ஆண்களை விடவும்,
என் வீரர்கள் குருதியால் தோய்ந்த
என் நிலத்தைப் பார்த்துப் பேசவே நான்
நினைக்கிறேன்.`

''
ஆடைகள் கிழிக்கப்பட்டும்,
அவயவங்கள் முறிகப்பட்டும்,
பொத்திப் பொத்திப்
பத்தியமாய் அம்மா
போற்றி வைத்த என்
பெண்மை
தின்னப் பட்டாலும்,
நான்
திடமாகத்தான் இருக்கிறேன்!

வாழும் ஆசையுடன் அல்ல!
உங்களை
வீழ்த்தும் வெறியுடன்!

`கையில் ஒரு ஆயுதமும்
இல்லை என்பதால் நான்
மெளனிக்கிறேன்
ஆனால்
ஆயுதம் செய்யாமல்
இருந்துவிடுவேன்
என்று நினைக்காதீர்கள்`

ஆயுதத்தை,
உங்கள் அட்டூழியத்தின்
கடைசி அத்தியாயத்தைக்
கட்டி காத்து
மரபுத்தமிழ்
ஊட்டிச் செழித்து வளர்க்கிறேன், இதோ!

அப்போது
எங்கள் தெருவில்
தினந்தினம்
கெடுக்கப்பட்ட கதைகள்
பேசிக் கூடியழுது
கலையும் எம்போன்ற
பெண்கள்
இருக்கமாட்டோம்,
இறந்திருப்போம்!

ஒரு சிங்களப் பள்ளியும்,
`ஆமி பாதுகாக்கும்`
புத்தவிகாரையும்,
வெள்ளைப் பாவாடை
சட்டையுடன்
`வெசாக்` கொண்டாடும்
வேற்று இனப்
பெட்டைகளும் இருக்கலாம்;

ஆனாலும் என்
குலமரபு
தமிழ் மரபு
எம்
காதல் மரபு
கலவி மரபு
வீர மரபு
என்
காமத்தின் பேரெழுச்சியில்
பொழிந்த காதல்த் தீர்த்தத்தில்
கருவாகி உருவான
என் மகன் எழுவான்!

அப்போது அவனுக்கு
இதே சந்தர்ப்பங்கள்
கிடைக்கும்
ஆனாலும் அவனது
தந்தையின்
இன்றைய தோல்வி
ஒரு வரலாற்றுப் பாடமாகத்
துணையிருக்கும்.

அவன் வெல்வான்!

எனது பணி முடிந்தது
நான் தயார்!
''

அவனது கையில் கிடந்த கெற்றப்போல் கவணைப் பிடுங்கி பரணில் ஒளித்து வைத்துவிட்டு, இறுக்கி அணைத்து மார்போடு சேர்த்து நெற்றி முகர்ந்தாள். ஐந்து விரல்களையும் மடித்துப் பொத்திக் கைகளை இறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள். கால்த்தடங்கள் அண்மித்துவிட்டதை மனது சொல்லிக் கொண்டிருந்தது அவளுக்கு. படபடப்பு அவளை மிஞ்சிக்கொண்டு எழுந்தது மனத்தின் பெருவெறி.
முற்றத்தில் குரைத்த நாயின் சள்ளையில் ஓங்கி உதைந்த உதைப்பில் `அவுக்` என்று கத்தியபடி மரணப் பயத்தில் வேலிக்கரையில் ஓடிப்போய் நின்று நன்றியை கண்ணீரால் சொரிந்து கொண்டிருந்தது அது, குரைக்கவில்லை.

3 comments:

  1. வாழ்த்துக்கள் வானளவ உயர...

    ReplyDelete
  2. //முற்றத்தில் குரைத்த நாயின் சள்ளையில் ஓங்கி உதைந்த உதைப்பில் `அவுக்` என்று கத்தியபடி மரணப் பயத்தில் வேலிக்கரையில் ஓடிப்போய் நின்று நன்றியை கண்ணீரால் சொரிந்து கொண்டிருந்தது அது, குரைக்கவில்லை//

    இறுதி வரிகள் அழுத்தம். அருமையான ஆரம்பம், வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  3. க‌ண்க‌ளில் நீரையும் ம‌ன‌தில் உர‌த்தையும் பாய்ச்சும் இந்த‌ இல‌க்கிய‌க்க‌ம‌ம் சுத‌ந்திர‌ப்ப‌யிரை அறுவ‌டை செய்யும் என்ப‌து திண்ண‌ம்.

    ReplyDelete